Wednesday 13 August 2014

சத்தியம்

பொதுவான தர்மங்கள் 

சத்தியம்


சகல மக்களுக்கும் அநுசரிக்க வேண்டிய சாமானிய தர்மங்களில் முதலாவது அன்பு (அஹிம்ஸை) அடுத்தது உண்மை (சத்தியம்)

சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இருப்பதுதான். மனசில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லியிருக்கிறார்கள்.

வாங்மனஸயோ. ஐக ரூப்யம் ஸத்யம்

மனத்தில் உள்ளதை வெளியிட்டுச் சொல்வதற்கென்றே பகவான் மனிதனுக்குப் பேசும் சக்தியைத் தந்திருக்கிறார். மனத்தில் ஒன்றும் வாக்கில்

வேறொன்றுமாக நாம் நடந்து கொண்டோமானால் அடுத்த ஜன்மத்தில் நமக்குக் கொடுத்த பேச்சுத் சக்தியைப் பறித்துக் கொண்டு விடுவார். அதாவது மிருக ஜன்மத்தையே நமக்குத் தருவார்.

பூரண அஹிம்சைக்கு நமது சாஸ்திரத்திலேயே சில விலங்குகள் இருக்கின்றன. தர்மத்துக்காக யுத்தம் செய்யும் போதும், யாகயக்ஞங்களில் பலி தருகிற போதும் அஹிம்ஸைக்கு விலக்குத் தரப்பட்டிருக்கிறது. சத்தியத்துக்கு இவ்விதமாக விலக்கே இருக்க முடியாது என்று நினைப்பீர்கள். ஆனால் சத்தியத்துக்கும் வேறொரு விதத்தில் விலக்கு இருக்கிறது. அதைக் கொஞ்சம் விளக்குகிறேன்.

ஊரிலே பலவிதமான அயோக்கியர்கள் இருக்கிறார்கள். அதைப் பார்த்து வாஸ்தவமாகவே ஒருவருடைய மனது கொதிக்கிறது. அவன் இந்தத் தப்பையெல்லாம் ஒயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் அந்த அயோக்கியத்தைச் செய்தான். இவன் இந்த அயோக்கியத்தனத்தைச் செய்தான் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான். ஆனால் இவன் அப்படிச் செய்வதான் இவனுக்கும் பிரயோஜனமில்லை. ஜனங்களுக்கும் பிரயோஜனமில்லை. இப்படி வியர்த்தமாக வாக்கும் மனசும் ஒன்றுபட்டிருப்பதை சத்தியம் என்று சொல்வதற்கில்லை.

ஒருவன் மனசில் கெட்ட எண்ணங்கள் எழுகின்றன. அதை அவன் அப்படியே வாக்கிலே வெளியிடுகிறான். அது சாத்தியமாகிவிடுமா. ஆகாது.

ஆகவே சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றுபடுவது மட்டுமில்ல. நல்ல மனசிலே தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம். நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.

மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் பிரியமாகவும் எது இருக்கிறதோ அதுவே சத்தியம் என்பதாக சத்தியத்துக்கு ஒரு லட்சணத்தை வகுத்திருக்கிறார்கள்.

ஸத்யம் பூதஹிதம் ப்ரியம்

பேச்சினாலும் காரியத்தினாலும் எண்ணத்தினாலும் பிராணிகளுக்கு நன்மையை உண்டாக்குவதே சத்தியம். கெடுதல் செய்வதெல்லாம் அசத்தியமே.

ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கடுமையாகச் சொன்னால் அதை யாறும் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாகப்போகிற நல்ல வாக்கு சத்தியமாகாது. நல்லதாகாவும் இருக்க வேண்டும். அது யாரை உத்தேசித்துச் சொல்லப்படுகிறதோ அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் ஹிதமாகவும் சொல்லப்பட வேண்டும். இதுவே சத்தியம்.

சத்தியத்தைச் சொல், பிரியமானதைச் சொல். சத்தியத்தைப் பிரியமாக சொல்ல முடியவில்லை என்றால், அப்போது அப்படிப்பட்ட சத்தியத்தையும் சொல்லாதே. கேட்கப் பிரியமானாலும், அசத்தியத்தைச் சொல்லாதே. என்பது பெரியவாளின் வாக்கு.

ஸ்த்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத்

ந ப்ரூயாத் ஸத்யம் அப்ரியம்

ப்ரியம் ச ந அந்ருதம் ப்ரூயாத்

காமமும் குரோதமும் உள்ள மனசிலிருந்து இப்படிப்பட்ட பிரியமான, நன்மையான வாக்கு வராது. க்ஷேமத்தையே உண்டாக்கும் சத்திய வாக்கு வரவேண்டுமானால், அதற்கு அடிப்படையாக காம, குரோதங்களற்ற நல்ல மனம் வேண்டும்.

ஆக சத்தியத்தின் லட்சணம், மனமும் வாக்கும் ஒன்று பட்டிருப்பது. மனம் சுத்தமாக இருப்பது. வாக்கு சாந்தமாக, ஹிதமாக இருப்பது. மொத்தத்தில் தனக்குச் சித்த சுத்தியையும் பிறருக்கு க்ஷேமத்தையும் உண்டு பண்ணுவது.

சத்தியத்திலேயே ஒருவன் நிலைத்து நின்று விட்டால் அதற்கு ஒர் அவாந்தரப் பிரயோஜனமும் உண்டு. அதாவது அந்த சத்தியசந்தன் உத்தேசிக்காமலே ஒரு பிரயோசனம் சித்திக்கும். அது என்னவெனில், ஒருவன் சத்தியமே பேசிப் பேசி பழகிவிட்டால் கடைசியில் அவன் எது சொன்னாலும் அது சத்தியமாகிவிடும். இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லவே மாட்டான். ஆனால், அறியாமையினாலோ தவறிப்போயோ அவன் ஒரு விஷடத்தைத் தப்பாகச் சொல்லி விட்டாலும், அந்தத் தப்பே கார்த்தத்தில் சத்தியமாக நடந்துவிடும். இதற்குத் திருஷ்டாந்தாரமாக ஒரு கதை சொல்கிறேன்.

திருக்கடவூரில் அபிராமி பட்டர் என்று அம்பாளின் பரம பக்தர் இருந்தார். அவர் அம்பாளையே நினைத்து பரவசமாகும்போது உன்மத்தரைப் போன்று பிதற்றுவார். இதைப் பற்றி சரபோஜி ராஜாவிடம் யாரோ துஷ்பிரயோகம் செய்தார்கள். அபிராமிபட்டர் ஒரு குடிகாரர், பக்தர் என்று வேஷம் போடுகிறார் என்று ராஜாவிடம் கோள் சொல்லிவிட்டனர். சரபோஜிக்கு இதைப் பரிசோதித்துப் பார்க்கத் தோன்றியது. ஒரு நாள் சரபோஜி திருக்கடவூரில் அம்பாளை தரிசிக்க வரும்போது, அங்கே தன்வசமிழந்திருந்த பட்டரிடம், இன்றைக்கு என்ன FF, என்று கேட்டான். அன்றைக்கு அம்மாவாஸை. பட்டரோ அம்பாளின் பூரண சந்திர முகத்தையே தியானம் செய்து பரவசமாக இருந்தார். எனவே அரசரிடம் இன்று பெனர்ணமி என்று சொல்லிவிட்டார். அரசன் தன்னிடம் மற்றவர்கள் பட்டரைப் பற்றிச் சொன்னது உண்மை என்றே நினைத்தான். பட்டரிடம் கேலியாக, அப்படியா சந்திரன் உதயமாகிவிட்டானா என்று ஆகாயத்தைப் பார்ப்போம் என்று தலையைத் தூக்கினான்.

அப்போது வாஸ்தவமாகவே ஆகாயத்தில் பூரண சந்திரன் வந்து நின்றது, அபிராமி பட்டர் சத்தியத்திலேயே ஊறியிருந்ததால், தவறிப்போய் அவர் அசத்தியத்தைச் சொன்னபோது, அம்பாளே தன் தடாங்கத்தைக் கழற்றி ஆகாயத்தில் iC, பூரண சந்திரனாக ஜொலிக்கச் செய்தாள்.

மகான்கள் செய்கிற ஆசீர்வாதம் அவர்கள் கொடுக்கிற சாபம் எல்லாம் அப்படியே பலித்து விடுவதற்குக் காரணம் அவர்களுடைய சத்தியத்தின் சக்திதான். அவர்கள் எது சொன்னாலும் நடந்துவிடும். இது சத்தியமாக

இருப்பதின் அவாந்தரப் பிரயோஜனம். ஆனால், தான் சொல்வதெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசை கொண்டு அதன் பொருட்டாக ஒருவரும் சத்தியத்தை அநுஷ்டிக்கக்கூடாது. உத்தேசமில்லாவிட்டால்தான் இந்தச் சக்தி தானாக வருமே ஒழிய உத்தேசித்துவிட்டால் அப்புறம் அது அவாந்தரமே இல்லை.

கர்ப்பமாக நாம் தாயாரிடம் வைக்கப்படுவதிலிருந்து, கடைசீயில் தகனமாகிற வரையில் நம்மை சுத்தப்படுத்த சாஸ்திரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது. அவற்றோடு, அஹிம்ஸை, சத்தியம், அஸ்தேயம், செனசம், இந்திரிய நிக்ரஹம் இவையும் நம்மால் அநுஷ்டிக்கப்பட்டால், நம் அழுக்குகள் எல்லாம்போய் நாம் உண்மையில் யார்?, ஸ்வாமி என்பவர் யார்?, பரம சத்தியம் என்பது என்ன?என்பதை எல்லாம் அறிகிற பக்குவம் உண்டாகும். பிறர் பொருள் மீது ஆசைப்படாமலிருப்பதே அஸ்தேயம். செனசம் என்பது சுசி என்பதிலிருந்து வந்தது. சுசி என்றால் சுத்தம். வெளியே சுத்தமாக தூய்மையாக, ஆச்சாரமாக இருந்தால் அதுவே உள்தூய்மைக்கு உபகாரம் செய்யும். நீராடுவது மற்றபடி ஆச்சாரங்கள் செனசத்தின் கீழ் வரும். இந்திரிய நிக்ரஹம் என்பது ரொம்பவும் முக்கியம். சரீர சந்தோஷத்துக்காக எதையும் செய்வது, எதை வேண்டுமானாலும் பார்ப்பது, எதை வேண்டுமானாலும் கேட்பது, எதை வேண்டுமானாலும் தின்னுவது, எதை வேண்டுமானாலும் பேசுவது என்றில்லாமல், இவற்றையெல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது இந்திரிய நிக்ரஹம் - புலனடக்கம் அதாவது யாராக இருந்தாலும் ஆசையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆசை போகாமல் எந்த ஆத்ம சம்பத்தும் உண்டாகாது. இங்கே சொன்னதெல்லாம் சகல ஜனங்களுக்குமான சாமானிய தர்மங்கள்.

Tuesday 12 August 2014

சுந்தர காண்டம் தரும் நன்மை

சுந்தர காண்டம் தரும் நன்மை
Radha Narayanan added 4 new photos.
சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!
1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.
3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.
4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.
5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.
6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.
7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.
8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.
9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.
10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.
11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.
13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.
14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.
17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.
18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.
19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.
20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.
21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.
22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.
23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.
24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.
25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.
26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.
27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.
28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.
29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.
30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.
31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.
32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம். (ராமாயணத்தை முழுமையாக படிப்பதா? அதுவும் ஒரே நாளில்… என்று நினைக்கவேண்டாம். அதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அடுத்த பதிவில் அது பற்றி சொல்கிறோம்.)
33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.
34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.
35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.
36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.
37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.
38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.
39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.
40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.

ஞானிக்கு கர்மாக்கள் எதற்காக? Karma for Gnanis

எந்தப் பலனும் தேவைப்படாத ஞானிக்கு, ஞானம் அடைந்தவனுக்கு கர்மாக்கள் எதற்காக?

அஞ்ஞானிக்கு இச்சா லாபத்திலேயே பற்று;அதற்காகவே சாஸ்திர கர்மாக்களைச் செய்கிறான். "அந்த சாஸ்திர கர்மங்களையே ஞானியும் பண்ணணும்ப்பா"என்கிறார். "ஞானிக்கு இப்படிப்பட்ட இச்சை, ஆசைப்பற்று இருக்கலாமா?அதுதானே நரக த்வாரத்துக்கு வழி?"என்று கேட்டால், "நான் அப்படிச் சொன்னேனா?ஞானியும் கர்மா பண்ணணும் என்றேனே தவிர, தன்னுடைய இச்சா பூர்த்திக்காப் பண்ணணும் என்று சொல்லவில்லையே!ஸந்தேஹமிருந்தால் இப்போதே qualifying clause போட்டு விடுகிறேன்:

குர்யாத் வித்வான் ததா அஸக்த :"

என்று 'அஸக்த:'வைச் சேர்க்கிறார். "அஸ்கத:"என்றால் 'பற்றில்லாதவனாக'என்று அர்த்தம். முதலில் அஞ்ஞானியைச் சொல்லும்போது முதல் வார்த்தையாகவே "ஸக்தா:"என்றார். "பற்றுள்ளவர்களான"என்று ஆரம்பித்தார். சிறியதான இந்திரிய இன்பப் பயன்களில் பற்றுக் கொண்டவர்களாக அவித்வான்கள் எந்தெந்த கர்மாக்களைச் செய்கிறார்களோ அவற்றையே வித்வானும் இப்படிப்பட்ட பற்று இல்லாமல் செய்ய வேண்டும் என்கிறார்.

"எதற்காக? ஞானி என்றால் ஞானம் அடைந்து விட்டவன் என்று அர்த்தம். ஞானத்துக்கு அப்புறம் அவன் அடைய வேண்டியது எதுவுமில்லை. அவனுக்கு எந்தப் பலனும் தேவைப்படாதபோது இந்தக் கர்மாக்கள் எதற்காக?"

"அதுவா?அவன் தனக்காக இப்படிச் செய்ய வேண்டும் என்று நான் சொன்னேனா என்ன?பின்னே ஏன் செய்ய வேண்டுமென்றால் -

சிகீர்ஷூ : லோக ஸங்க்ரஹம் " .

"ஸங்க்ரஹம்"என்றால் நன்றாகப் பிடித்துக் கொள்வது; அதாவது கட்டிப் பிடித்துக் காப்பாற்றுவது. "லோக ஸங்க்ரஹம்" என்றால் லோகத்தை இப்படிப் பரம அன்போடு கட்டிக்காப்பது - நல்வழிப்படுத்துவது. லோகம் என்றால் அஞ்ஞானிகள்தான். ஞானி லோகத்துக்கு மேலே போனவன்.

"சிகீர்ஷூ :"- விரும்பி;  "லோகஸங்க்ரஹம் சிகீர்ஷூ:"- உலகத்தை உயர்ந்த மார்க்கத்தில் கொண்டு போக வேண்டுமென்று விரும்பி.
ஞானிக்கு ஆசை இருக்கக் கூடாதுதான் என்றாலும் பகவானே அவன் மனஸு கருணை சுரக்கும்படிப் பண்ணி, "ஐயோ, லோகம் இப்படிக் கெட்டுப்போய் கஷ்டப்படுகிறதே; இதை ஸங்க்ரஹம் பண்ண வேண்டும்" என்று ஆசைப்பட வைக்கிறான்.

அதாவது ஜனங்களை மேலே கொண்டு போவதற்காகவேதான் ஞானியும் அவர்களைப் போல சாஸ்திர கர்மாக்களைப் பண்ணிக்காட்ட வேண்டும். தன்னுடைய உச்ச நிலைக்கு அவர்களை அழைத்துக் கொண்டு போவதற்காகவே அவர்கள் இருக்கிற ஏணிப்படிகளில் இறங்கி வந்து, அவர்களுடைய கையைப் பிடித்துக்கொண்டு, 'ஸம்-க்ரஹம்' என்றபடி நன்றாக இறுக்கிப் பிடித்து மேலே ஏற்றிக் கொண்டு போக வேண்டும்.

சாஸ்திரோக்தமாக ஸாதாரண ஜனங்கள் என்னென்ன கர்மா செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் ஞானியே மாடலாக இருந்து பண்ணிக் காட்டி, அவர்களையும் பண்ண வைக்க வேண்டும். அவனுடைய ஞானத்தையும் பக்தியையும் அப்புறந்தான் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இப்போது அவர்களுக்கு அதில் ருசி வராது. அதனால் முதலில் அவர்கள் சாஸ்திரோக்த கர்மாக்களைப் பண்ணுவதற்கே, தன்னளவில் அவற்றைக் கடந்துவிட்ட ஞானியும் (ஞானி என்றால் பக்திமானும் தான்) இவற்றைச் செய்து ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் இவன் மாதிரி ஆவதற்காகவே முதலில் அவர்கள் மாதிரி இவன் ஆக வேண்டும். மேல்நிலையில் இருக்கிற அவன் வாஸ்தவத்தில் கர்மாவில் ஒட்டாவிட்டாலும் அப்படி நடக்க வேண்டும். (இதற்கு நேர்மாறாகத்தான் இப்போது நிஜமாக வேதாந்தத்தில் ஒட்டிக் கொண்டிருந்தவர்களும் அப்படி நடிக்கிறார்கள்!)

அப்படியானால் ஞானிக்கு மட்டும் உள்ளன்றும் புறமொன்றுமாக இருக்கிற "மித்யாசார தோஷம்" ஒட்டாதா?

ஒட்டாது. வாஸ்தவத்தில்தான் அவனுக்கு "உள்- புறம்" என்ற பேதமேயில்லையே! எதிலும் ஒட்டாத நிலைதானே ஞானம்? அதில் தோஷம் மட்டும் எப்படி ஒட்டும்? இன்னொரு எக்ஸ்ப்ளனேஷன்: இவன் வேதாந்திவேஷம் போடுகிறவனைப் போலத் தன்னைப் பற்றி லோகம் உசத்தியாக நினைக்கவேண்டுமென்றா துராசையில் இப்படிச் செய்கிறான்? கர்மாவைச் செய்யப் பிடிக்காத அடங்காக் குணத்தாலே அவன் ஞானி வேஷம் போடுகிறானென்றால், இவனோ நிச்சிந்தையான நிஷ்க்ரிய ஞான நிலையின் நிம்மதிலேயே தான் பாட்டுக்குக் கிடக்கலாம் என்றில்லாமல், பாமர ஜனங்களிடம் பரம கருணையாலல்லவா கர்மி மாதிரித் தன்னைக் குறைத்துக் காட்டிக்கொண்டு, தனக்கு வேண்டியே யில்லாத கார்யங்களை இழுத்துப் போட்டுக்கொள்கிறான்? இது தியாகமே தவிர, மித்யாசாரமாக எப்படி ஆகும்?

ஸரி, இவன் எதற்காக இந்த சாஸ்திர கர்மாக்களைச் செய்ய வேண்டும்? இவனை லோகம் ச்ரேஷ்டன் என்று நினைக்கிறது. இவனைப்போல உயர்ந்த ஸ்தானத்திலிருக்கிறவர்கள் எப்படி நடக்கிறார்களோ அப்படி நடந்து பார்க்க வேண்டுமென்று ஜனங்களுக்கு உள்ளூர ஒரு ஆசையுண்டு.

யத் யத் ஆசரதி ச்ரேஷ்ட : தத் தத் ஏவ இதரோ ஜந : (3.21)

ஆசை உண்டே தவிர, ச்ரேஷ்டர்கள் நடப்பது ரொம்பவும் உயர்ந்த மாதிரி இருந்தால், இவர்களால் பின்பற்ற முடியாமல், அதை அநுஸரிக்க முடியாமல் தோற்றுப் போவார்கள்; தோற்றுப்போவது தெரியக்கூடாது என்று போலியாக வேஷம் போடுவார்கள். அதனால் ச்ரேஷ்டனாயிருக்கப்பட்டவனே ஸாதாரண ஜனங்கள் இருக்க வேண்டிய, இருக்கக்கூடிய கீழ் லெவலுக்கு வந்து, அந்த லெவலின் ஒழுங்குகளை நடத்திக் காட்டுகிறான். ஞானிக்கு அது கீழ் லெவல் என்றாலும் ஸாதாரண மநுஷ்யனுக்கு அவனால் முடியக் கூடியதான சற்று உயர்ந்த லெவல்தான். சாஸ்த்ரோக்த கர்மா என்ற இந்த லெவலை விட்டால்தான் அவன் இன்னம் கீழ் லெவலில் பாழாய் விடுவான். இந்திரியம் இழுத்தபடிச் சிற்றின்பக் காரியங்களை மட்டுமே செய்தால் பாமர ஜனங்கள் அந்தச் சேற்றிலேயே புதைந்து போய், அப்புறம் ச்ரேஷ்டனாலுங் கூட அவர்களைத் தூக்கிவிட முடியாமல் போய்விடும். அதனால் சின்ன லாபங்களையே ஒரு நிலையில் தருவதாயிருந்தாலும், இதற்காக இந்திரியங்களை தெறிகெட்டுப் போகவிடாமல் அவற்றுக்கு இஷ்டமான பலன்களை ஒரு பக்கம் கட்டுப்படுத்தி, சுத்தி பண்ணிக்கொண்டுமிருப்பதான சாஸ்திர கர்மாக்களை ச்ரேஷ்டன் பற்றில்லாமல், பட்டுக் கொள்ளாமல் அநுஷ்டித்துக் காட்டவேண்டும்.

இவனைப் பார்த்து இவன் மாதிரியே பண்ண விரும்பும் ஜனங்களாலும் இவற்றை அநுஸரிக்க முடியும். த்யானம், ஆத்மவிசாரணை பண்ண முடியாது என்கிற மாதிரி, கர்மாக்களைப் பண்ண முடியாது என்று இல்லை. எல்லாரும் பண்ணுவார்கள். அதற்கு goal -ம் மோக்ஷம், ஸம்ஸார நிவிருத்தி என்பது போல் அவர்களுக்கு அப்பீலாகாத ஏதோ ஒன்றாயில்லாமல், அவர்கள் ஆசைப்படும் லாபங்களாகவே இருப்பதால் இந்தக் கர்மாக்களைப் பண்ணுவதில் ச்ரமங்கள் நியமங்கள் இருந்தாலுங்கூடப் பொறுத்துக் கொண்டு பண்ணுவார்கள்.

இப்படி ச்ரமப்பட்டும், நியமத்துக்குக் கட்டுப்பட்டும் பண்ணுவதாலேயே கர்மாவானது இவர்கள் உத்தேசித்த பலனைத் தருவதோடு, உத்தேசிக்காத பலனாக இவர்களுடைய உள்ளத்தின் அழுக்குகளை அலம்பி, இவர்களுடைய ஆசைப்பற்றுக்களையும் குறைக்க ஆரம்பிக்கும். அப்புறம் ஐஹிகமான (இஹலோகத்து) பலனுக்காக இல்லாமல், ஸமூஹம் ஒரு ஒழுங்கில் நடக்க வேண்டும், குடும்பம் ஒரு ஒழுங்கில் நடக்க வேண்டும், தனி ஆள் ஒரு கட்டுப்பாட்டில் சீராக அபிவிருத்தியாக வேண்டும் என்பதற்காகவே சாஸ்திர கர்மாக்களைத் தொடர்ந்து பண்ணிக் கொண்டிருப்பார்கள். நிஷ்காம்யகர்மா என்பது இதுதான். அதற்கு போவதற்கு வழி காம்யமாக சாஸ்திர கர்மா பண்ணுவதுதான். பலனில் ஆசையோடு பண்ணுவதே காம்யம்.

மேல்நிலையில் உள்ளவன் - "ச்ரேஷ்டன்" என்று சொல்லப்பட்டவன் - ஸாதாரண ஜீவனைக் காம்யமாகவாவது சாஸ்திர ஆசாரங்களுக்குக் கட்டுப்பட்டு கர்மா பண்ண வைப்பதற்காகத்தான் அவற்றைத் தானும் நிஷ்காம்யமாகப் பண்ணி வழிகாட்ட வேண்டும் என்று பகவான் உத்தரவு போடுகிறார். பாமரஜனங்கள் 'ஸக்தர்'களாகப் பண்ணுவது என்று அவர் சொன்னதே காம்யம்;அதை வித்வான் 'அஸக்த'னாகப் பண்ண வேண்டுமென்பதே நிஷ்காம்யம்.

வித்வான் பண்ணிக் காட்டாவிட்டாலும் பொது ஜனங்கள் ஏதாவது கர்மா பண்ணிக் கொண்டேதான் இருப்பார்கள் - காம்யமாக, "அது வேணும், இது வேணும்"என்று எதையாவது கார்யத்தைப் பண்ணிக் கொண்டிருக்காமல் எவனும் க்ஷணங்கூடச் சும்மா இருப்பதில்லை; ந U கச்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்-யகர்மக்ருத். ஏனென்றால் பிரகிருதி என்ற மாயை இப்படித்தான் ஸத்வ-ரஜோ-தமோ குணங்களால் ஜீவனைக் கட்டி அவனறியாமலே எதையாவது பண்ணிக் கொண்டிருக்கும்படி ஆட்டி வைக்கிறது : கார்யதே ஹ்யவச : கர்ம : ஸர்வ-ப்ரக்ருதிஜைர் குணை : (3.5)
ஆதலால், வித்வான் என்கிற ச்ரேஷடன் முன்னுதாரணமாகச் செய்து காட்டாவிட்டாலுங்கூட, ஸாதாரண ஜனங்கள் தாங்களாகவே ஆசைப் பூர்த்திக்காக எதையாவது செய்துகொண்டுதானிருப்பார்கள். இதையேதான் இவர்கள் சாஸ்திரத்துக்குக் கட்டுப்பட்டுச் செய்யுமாறு வித்வான் தன் எக்ஸாம்பிளால் தூண்டுதல் தருகிறான். காம்ய கர்மாதான் 'ஆப்ஜெக்டிவ்', அதாவது லக்ஷ்யம் என்றாலும்கூட அதற்குப் போகிற வழி, means, தன்னிஷ்டப்படியில்லாமல் சாஸ்திரோக்தமாக மாற்றி அமைக்கப்படும்போது அதன் தன்மையே அடியோடு மாறிப்போகிறது! மட்டமாக இருப்பதே உத்தமமாக மாற்றப்படுகிறது. இச்சா பூர்த்திக்காகவே பண்ணுவதென்கிற போதும் சாஸ்திர கர்மா என்றால், "இத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும், ஸ்நானம் பண்ண வேண்டும், ஸத்வமாக இன்ன ஆஹாரந்தான் இத்தனை மணிக்கு அப்புறம் சாப்பிட வேண்டும், வேர்க்க, விருவிருக்க ஹோமம் பண்ண வேண்டும், மணியடிக்க வேண்டும்" என்றெல்லாம் எத்தனை கட்டுப்பாடுகள் இருக்கின்றன? இதெல்லாம் சாஸ்திரோக்தமாகயில்லாமல் தன்னிஷ்டப்படி செய்யும் போது இல்லை அல்லவா? நெறியில்லாமல் செய்வதாலேயே ஆசையும் அழுக்கும் அதிகமாகின்றன. அதையே நெறியோடு செய்தால் சாந்தியும், சுத்தியும் ஏற்பட ஆரம்பிக்கின்றன. தன்னிஷ்டப்படியே செய்யும்போது அஹங்காரந்தான் அதிகமாகிறது; பயபக்திக்கு அங்கே இடமேயில்லை. சாஸ்திர கர்மாவினால் இஷ்ட பலனைத் தருபவனும் ஒரு ஈஸ்வரன்தான் என்று காட்டி, அவனைப் பிரார்த்தித்து அவனுக்கு அடங்கியே காம்யமானதைக் கேட்டுப் பெறச் சொல்லும்போது பயபக்தி உண்டாகி இவனை சுத்தி செய்கிறது.

காம்ய பலனுக்காவே சாஸ்திர கர்மாவைக் காட்டி ஜீவனை நல்ல வழியில் 'தாஜா' பண்ணிக்கொண்டு வருவதற்கு sugar-coated pills -ஐ (சர்க்கரை தடவிய மாத்திரையை) உதாரணமாகச் சொல்லலாம். இஷ்ட பலன்தான் சர்க்கரை மாதிரி ஜீவனுக்குத் தித்திருக்கிறது. அவன் குழந்தையைப் போல அறியாதவனாயிருக்கிறான். சர்க்கரை உடம்புக்குச் சூடு என்று குழந்தைக்குத் தெரியாததுபோல இந்த ஐஹிக ஸெளக்யங்கள் ஆத்மாவுக்குக் கெடுதி என்று அவனுக்குத் தெரியவில்லை. சாஸ்திரகாரர்களான ரிஷிகளுக்கு இந்தக் குழந்தையிடமும் கருணை. அதனால் அது கேட்கிற பெப்பர்மின்டைக் கொடுக்க நினைக்கிறார்கள். குழந்தை பெப்பர்மின்ட் என்றே நினைத்தாலும் அது உள்ளுக்குள்ளே மருந்து. உள்ளே மருந்தை வைத்து மேலே சர்க்கரையைப் பூசியிருக்கிறது. சூட்டைத் தணிக்கிற மருந்துச் சரக்கு உள்ளே நிறைய இருக்கிறது; மேலே மட்டும் கொஞ்சூண்டு சூடு பண்ணும் சர்க்கரை தடவியிருக்கிறது. இதுதான் சாஸ்திரோக்த கர்மா. இஷ்ட பூர்த்தி என்று வெளியிலே தித்திப்பாகத் தெரிகிறது. உள்ளே இந்த இஷ்டமெல்லாம் கஷ்டம்தான் என்று புரியவைத்து இஷ்டப்படி செய்யாமல் நல்ல நெறியில் கட்டுப்படுத்துகிற விவேக மருந்து இருக்கிறது. மருந்து இருப்பது தெரியாமலேதான் குழந்தை சாப்பிடுகிறது. ஆனால் அது பலிக்காமல் போய்விடுமா என்ன?

இன்னொன்று: காம்ய கர்மாவைத்தான் பகவான் இங்கே சொல்கிறாரென்றாலும், சாஸ்த்ரோக்தமாகப் பண்ண ஆரம்பிக்கும்போதே, காம்ய கர்மாக்களோடு நிஷகாம்யமாகவும் சில காரியங்களைக் கொடுத்துத்தானிருக்கிறது. ஸந்த்யாவந்தனம் போன்றவற்றைப் பண்ணுவதால் காம்யமாக இன்ன லாபம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கவில்லை; இவற்றைப் பண்ணாமல் விட்டால் பாவம், தோஷம் என்று சொல்லி, அதற்குப் பயந்துதான் பண்ண வைத்திருக்கிறது. காம்யபலன் வேண்டும் என்ற ஆசையினால் அதற்கான சாஸ்த்ரோக்த கர்மாக்களைச் செய்யும் ஜீவன் அதோடுகூடச் சொன்ன இம்மாதிரி நிஷ்காம்யமான கர்மாக்கள் ஒன்றிரண்டையும் செய்கிறான். இது இவன் சித்த சுத்தியில் பக்வப்படுவதற்கு மேலும் ஸஹாயம் செய்கிறது.

Friday 1 August 2014

Inline image 1

நாம் வெள்ளைக்காரர்கள் அல்ல. ஜனவரி முதல் நாள் எந்த விதத்திலும் நமது புத்தாண்டு அல்ல. ஆனால் பல நூறு ஆண்டுகள் வெள்ளையர் ஆண்ட நாடு இது. அவர்கள் அறிமுகப்படுத்திய பழக்க வழக்கங்கள் இன்றும் நம்மை விட்டு போகவில்லையே. ஆங்கிலத்தில் வீட்டிலேயே பேசும் தமிழ்க்குடும்பங்கள் அதை நாகரிகமாக கருதுகிறோமா? தாய்மொழி தள்ளி வைக்கப்படுவது ஏன்? அதன் சிறப்பு ஏன் புரியவில்லை? கொஞ்சம் கொஞ்சமாக நாம் மேற்கு நோக்கி ஏன் நகர்கிறோம்? நாம் என்ன காட்டு மிராண்டிகளா இன்னும்? எனக்கு இதற்கெல்லாம் விடை தெரியாது. ஏனெனில் நானும் கும்பலில் ஒருத்தன் தானே.

சரி, வழக்கம் போலவே ''ஹாப்பி நியூ இயர்'' சொல்கிறேன் அதோடு அங்கொரு கால் இங்கொரு காலாக ஒரு உருப்படியான விஷயமும் தருகிறேனே. நான் தரவில்லை இந்த விஷயம். மகா பெரியவா உங்களுக்கு தந்தது.

புது வருஷம் அன்றாவது/புது வருஷம் முதலாவது இதை கொஞ்சம் படித்து சாவதானமாக மனத்துக்குள்ளே உலவ விட்டால், தக்க வைத்தால், துக்குணியூண்டாவது பின்பற்றினால் --------- இது மகா பெரியவாளுக்கு சமர்ப்பிக்கும் புது வருஷ நமஸ்காரமாகட்டுமே.

மஹா பெரியவா சொன்னது நிறைய நிறைய சமுத்ரமாக இருக்கிறதே. அதை எல்லாம் எப்படி ஒரு மெயிலில் அனுப்ப முடியும்? தினமும் பத்து அல்லது பதினைந்தாக தரட்டுமா? இதோ ஆரம்பித்தாகி விட்டது.


1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம்சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.

2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதேஎன்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.

4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.

5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.
6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறேஇருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை. மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.
7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (''சிவ'' என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.

8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய
நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.

9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவைகளாவன: (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்தை ஜபம் செய்தல், (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல், (5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது.

(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம். ''கொல்வாரேனும், குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே'' - சம்பந்தர்.)

10. பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம்அடிக்கிறோம். அதுபோல பரமேச்வரன் தேவதைகளை சிக்ஷித்தார். ஹாலஹால விஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.

11. பரமேச்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய அர்த்தத்தை விசாரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு மாண்டூக்யோபநிஷத் என்று பெயர். அதில் ‘சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம். ப்ரதோஷ காலத்தில் ஈச்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈச்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈச்வர தரிசனம் செய்கிறார்கள்.
12. சாங்க்ய சூத்திரத்தில் மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில் ஈச்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில் ‘சப்தாதேவப்ரமித’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேச்வர ஸ்வரூபம்.

13. நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில் ஒரு கேள்வி கேட்கிறார். ‘கோ ப்ராம்மணை ருபாஸ்ய:?’ ‘காயத்ரி அர்க்காக்னி கோசர: சம்பு:’ எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும் மூன்றிலும் ப்ரகாசிக்கிறது? சிவன் தான். காயத்ரியின் பரமதாத்பர்யமாயிருப்பவர் அவரே. சூரியனிடத்தில் பிரகாசிப்பவரும் அவர் தான். ஸ்ரீருத்ரத்தில் பரமேச்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த மூன்றிலும் பரமேச்வரனை ஆராதிக்க வேண்டும்.

14. விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்டாகிறது. அதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள்.

15. ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம் பக்தி இருக்க வேண்டும். எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ அப்படி அம்பிகை லோகத்தில் வித்தை, செல்வம் முதலியவைகளை அடையச் செய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள்